கச்சத்தீவு விவகாரத்தில் 1974இல் நடந்த தவறுக்கு இன்று மா நிலத்தை ஆளும் கட்சிக்கும் (திமுக), அன்றைய மத்திய ஆட்சிக்கும் (காங்கிரஸ்) பொறுப்பு உள்ளது என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை சார்பில் சமூக வலைதளப் பக்கத்தில்.பதிவிடப்பட்டுள்ளது. அதில், "ராமேஸ்வரத்துக்கு இன்று நான் சென்றிருந்தபோது, துன்பத்தில் உழலும் நமது மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளைச் சந்தித்தேன். அவர்களின் நிலை மீது நான் ஆழ்ந்த இரக்கம் கொள்கிறேன்.

நமது வறியநிலை மீனவர்களின் வாழ்வாதார கவலைகளுக்கு காரணமான மிகவும் உணர்திறனற்ற 1974 ஆம் ஆண்டு அநியாயமான ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள். கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததன் மூலம் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்தன.
அன்றிலிருந்து இன்று வரை நமது மீனவ சமூகம் தொடர்ந்து இன்னல்களை அனுபவித்து வருகிறது. இலங்கை அரசால் அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த நீடித்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் மீது வெறுப்பை உமிழ்வதே ஆளுநரின் வேலை-அமைச்சர் ரகுபதி காட்டம்..!

இந்தப் பிரச்சினையை அரசியலாக்குவதற்குப் பதிலாகவும், மத்திய அரசைக் குறை கூறுவதற்குப் பதிலாகவும், ஆக்கபூர்வமான அணுகுமுறையை மாநில அரசு மேற்கொண்டால், அது பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு பெரிதும் உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக, 1974-இல் நடந்த தவறுக்கு சம பொறுப்பு, அன்றைய மத்திய ஆட்சி கூட்டணியில் இருந்த இன்று மாநிலத்தை ஆளும் கட்சிக்கும் உள்ளது." என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட விவகாரத்தில் திமுக - காங்கிரஸே காரணம் என்று கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது பாஜக தீவிர பிரசாரம் மேற்கொண்டது. பிரதமர் மோடி தொடங்கி பாஜக தலைவர்கள் இதை பேசுபொருளாக்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அண்ணாமலை, ஆளுநர் ரவி, ஜே.பி நாட்டா திடீர் சந்திப்பு..! ப்ரயாக்ராஜில் திடீர் ஆலோசனையால் பரபரப்பு..!