தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சியினரும் அதற்கான ஏற்பாடுகளில் திவிரமாக களமிறங்கி உள்ளனர். கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை திரைமறைவாக நடந்து வருகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் அரசியல் பிரவேசம் பிற கட்சியினர் இடையே புது அச்சத்தை தோற்றுவித்துள்ளது. இந்நிலையில் 2026-ல் அரியணை ஏறப்போவது யார்? எந்த கூட்டணி என அரசியல் விமர்சகர்கள் இப்போதே பேசத் துவங்கி உள்ளனர்.
தேசிய கட்சியான காங்கிரஸ் கூட்டணியில் திமுக உறுதியாக உள்ள நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு தேசிய அளவில் யாரை கூட்டணியில் சேர்ப்பது என்ற யோசனை இருந்தது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் பாஜக கூட்டணிக்கு செல்வதற்கு யோசனை இருந்தது.

இந்நிலையில் நேற்று திடீர் பயணமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் டெல்லி சென்றனர். அங்கு நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினர். இதனால் அதிமுக - பாஜக கூட்டணி அமைய உள்ளதாக தமிழகத்தில் பேச்சு அடிபட்டது. அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்வீட் ஒன்றை போட்டார். அதில் 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என்றார். இதனால் கிட்டத்தட்ட பாஜக - அதிமுக கூட்டணி அமைந்துவிட்டதாகவே பேச்சு அடிபட்டது.
இதையும் படிங்க: எடப்பாடி முன்பிருக்கும் 2 ஆப்ஷன்... அமித் ஷா போட்ட கன்டிஷன்... ஏற்குமா அதிமுக?

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிசாமி கூறியதாவது; தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் விவாதித்தோம். தமிழக திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்தினோம்.
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டுமென அமித்ஷாவிடம் வலியுறுத்தினேன். மும்மொழிக் கொள்கையை திணிக்க கூடாது. தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு பாதிக்கப்படக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது; அப்படி மேற்கொண்டால் நியாயமான முறையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள வேண்டும்.

மேகதாது, முல்லைப்பெரியாறு அணை விவகாரங்களிலும் நடவடிக்கை கோரியும், தமிழகத்தில் டாஸ்மாக் ஊழலை முழுமையாக விசாரிக்க கோரியும் வலியுறுத்தினோம். தமிழகத்தில் நடக்கும் சட்டம் ஒழுங்கு, பாலியல் வன்கொடுமைகள் பிரச்சினைகள் குறித்தும் அமித்ஷாவிடம் தெரிவித்தோம். அதிமுக அலுவலகத்தை பார்வையிடவே வந்தேன். நேரம் கிடைத்தால் அவரை பார்க்கலாம் என்று இருந்தோம். அதன்படி, நேரம் ஒதுக்கப்பட்டதும் 45 நிமிடம் ஒவ்வொரு பிரச்சினைகளை விரிவாக எடுத்துரைத்து அவரிடம் பேசினோம்.

கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை, முழுக்க முழுக்க மக்கள் பிரச்சினையை பேசுவதற்கு தான் அமித்ஷாவை சந்தித்தேன். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களது கொள்கை எப்போதும் நிலையாக இருக்கும். கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படுவது, தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது.
கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறும். தேர்தல் நேரத்தில் என்ன சூழ்நிலை இருக்குதோ, அதை பொறுத்தே கூட்டணி மாறும். கூட்டணி இருக்கு இல்லை என்பதை இப்போது சொல்ல முடியாது. ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி மக்கள் பிரச்சினைகளை பேசி தீர்வு காணும் கட்சி அதிமுக என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதையும் படிங்க: அமித் ஷாவுடன் 15 நிமிட ரகசிய பேச்சுவார்த்தை... EPS டெல்லி விசிட் சீக்ரெட்!