பாகிஸ்தானை சேர்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், திருமணத்தின் மூலம் இந்தியாவுக்குள் வந்துள்ளனர் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே விமர்சித்துள்ளார்.
ஏப்ரல் 22இல் ஜம்மு காஷ்மீரின் பைசரன் பள்ளத்தாக்கில் பஹல்காமில் பாகிஸ்தானோடு தொடர்புடைய தீவிரவாதிகள் ராணுவ உடையில் வந்து நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோனர் சுற்றுலாப் பயணிகள் ஆவர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி - வாஹா எல்லை மூடல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது.

மேலும் இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களின் விசாக்களை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. இந்தியர்களை திருமணம் செய்த பாகிஸ்தானியர்களும் அனுப்பபடுகின்றனர். ஆனால், பல இடங்களில் அவர்கள் வெளியேற மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தீவிரவாதத்தின் புதுமுகமாக திருமணம் இருக்கிறது என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் நிஷிகாந்த் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘திருமணத்தின் மூலம் மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பெண்கள் இந்தியாவுக்குள் வந்துள்ளனர். அவர்களுக்கு இன்னும் இந்திய குடியுரிமை வழங்கப்படவில்லை. இதுபோல் திருமணம் மூலம் இந்தியாவுக்குள் வரும் பாகிஸ்தான் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, தீவிரவாதத்தின் புதுமுகமாக தெரிகிறது. இதை எதிர்த்து நாம் எப்படி போராட போகிறோம். இந்த விஷயம் மிகவும் கவலை அளிக்கிறது’’ என்று நிஷிகாந்த் துபே விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: கெடு முடிந்தும் செல்லாத பாகிஸ்தானியர்களுக்கு சிறை தண்டனை..அதிரடி முடிவுக்கு தயாராகும் அரசு?

இந்நிலையில், அட்டாரி எல்லையில் இந்திய அதிகாரி அருண்பால் கூறுகையில், "பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட தூதரக, நீண்ட கால, அலுவல் ரீதியிலான விசாக்களை தவிர்த்து மற்ற சிறப்பு விசாக்கள், குறுகிய கால விசாக்கள் அனைத்தும் ஏப்ரல் 27ஆம் தேதியே ரத்தாகிவிட்டது. அதன்பின் கடந்த 3 நாட்களில் இந்தியாவில் இருந்து 537 பாகிஸ்தானியர்கள் வெளியேறி உள்ளனர். அதே நேரத்தில் பாகிஸ்தானில் இருந்து இந்தியர்கள் 850 பேர் நாடு திரும்பி உள்ளனர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிகிச்சைக்காக 2 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தானியர்.. இக்கட்டான சூழலால் பரிதவிக்கும் தந்தை..!