ஒவ்வொரு விஷயத்திலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய் மட்டுமே பேசி வருகிறார் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா பேசினார்.
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் 60ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மணி விழா பொதுக்கூட்டம் கோவையில் ராஜவீதி தேர்நிலை திடலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா பங்கேற்று பேசினார். "திமுகவினர் தேச துரோகிகள் ஆவர். இந்திய ஒற்றுமையைக் கெடுக்க வேண்டும் எனச் சுதந்திரம் முதலே முயற்சி செய்து வருபவர்கள். 2010ஆம் ஆண்டில் நீட் மசோதாவை திமுகவினர்தான் முன்மொழிந்தனர். மத்தியில் மன்மோகன் சிங்கும், மாநிலத்தில் மு. கருணாநிதியும் ஆட்சியில் இருந்தபோதுதான் நீட் நுழைவுத் தேர்வு முதல் முறையாகக் கொண்டு வரப்பட்டது.

ஆனால், இப்போது அவர்கள் அதை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். இவை ஒரு புறம் இருக்க, தற்போது, இந்துக்களின் சொத்துக்களை அபகரிக்கின்றனர்.
இந்து கோயில்களில் நிலம், பணத்தை அரசு கொள்ளை அடிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் போதைப்பொருட்கள் புழக்கத்தில், பஞ்சாப்தான் முதல் மாநிலமாக இருந்தது. தற்போதைய திமுக ஆட்சியால், தமிழகம் முதலிடத்தை பிடித்து விட்டது. பள்ளி குழந்தைகள் வீட்டுக்கு வந்தால், அவர்கள் பைகளில் போதைப்பொருட்கள் உள்ளதா எனப் பெற்றோர் சோதித்து பார்க்கும் அளவுக்கு, தமிழகத்தைச் சீரழித்து வைத்துள்ளனர்.

ஒவ்வொரு விஷயத்திலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய் மட்டுமே பேசி வருகிறார். பொய் புரட்டு, இதுதான் திராவிட உருட்டு. தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும். அப்படி இணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும்.
அதற்கு நாம் ஒவ்வொருவரும், தினமும் குறைந்தது ஐந்து பேரிடம் அல்லது இரண்டு குடும்பங்களைச் சந்தித்து பேச வேண்டும். இந்துக்களின் உரிமைகளை எடுத்துரைக்க வேண்டும்." என்று ஹெச். ராஜா பேசினார்.
இதையும் படிங்க: ஒன்னா தேர்தலை சந்திக்கிறோம்.. பாஜகவை வீழ்த்துறோம்.. ஸ்டாலினை சந்தித்த எம்.ஏ. பேபி சூளுரை!

விழாவில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசும்போது, ''2047ஆம் ஆண்டு வரை மோடிதான் பிரதமராக இருக்க வேண்டும். அப்போதுதான் நம் நாட்டைக் காப்பாற்ற முடியும். தற்போது இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இந்துக்கள், சிறுபான்மையினராக மாறி விட்டனர். இந்த நிலை நீகோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், அவர்கள் பெரும்பான்மையினராக மாறிவிடுவார்கள். அதன்பின்னர் இந்தியாவை ஒருவராலும் காப்பாற்ற முடியாது' என்று அர்ஜூன் சம்பத் பேசினார்.
இதையும் படிங்க: மூன்றாவது முறையாக அதிமுக - பாஜக கூட்டணிக்கு தோல்வி உறுதி.. விளாசும் முதல்வர் மு.க. ஸ்டாலின்.!!