திமுக சார்பில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்கிற கண்டனப் பொதுக் கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். இதேபோல் தமிழகத்தில் பிரதான எதிர்கட்சியான அதிமுக, தமிழகத்தை டெல்லியில் அடமானம் வைத்தது என்றும் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.
முதல்வர் ஸ்டாலினின் இந்த விமர்சனத்துக்கு எதிர்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிலளித்திருந்தார். அதில், "கல்லக்குடியில் ரயில் வராத தண்டவாளமாகப் பார்த்து தலை வைத்ததில் தொடங்கிய நாடக வரலாறு , இன்று வரை துரோக சரித்திரமாக நீண்டுகொண்டு இருக்கிறது.

கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்தையே மறந்துவிட்டு இந்தி திணிப்பை முதன்முதலில் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்தது முதல் ,
இன்றைக்கு கொல்லைப்புறமாக பி. எம். ஸ்ரீ திட்டத்தை முதலில் வரவேற்றுவிட்டு, தற்போது எதிர்ப்பு நாடகம் ஆடும் திமுகவிற்கு அதிமுக பற்றி பேச எள்ளளவாவது அருகதை இருக்கிறதா? மீத்தேன்- ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டு டெல்டா விவசாயிகளின் உரிமையை அடகு வைத்தவர்தானே நீங்கள்?
நீட் என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்தியதே திமுக- காங்கிரஸ் கூட்டணிதானே? அதே கூட்டணியே சேர்ந்தவர்களை வைத்து உச்சநீதிமன்றம் வரை சென்று நீட்டை கொண்டு வர வாதாடி மாணவர்களின் மருத்துவ கனவை அடகு வைத்த பாவிகள்தானே நீங்கள்? அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் ஏல முடிவுகள் வரும் வரை கள்ள மவுனம் சாதித்து, பல்வேறு சதிச் செயல்களால் மதுரை மாவட்ட மக்களின் வாழ்வியலையே அடகு வைக்க முயற்சித்தவர்கள் தானே நீங்கள்? மூன்றாவது மாடியில் சிபிஐ ரெய்டு நடக்க, முதல் மாடியில் முன்று மடங்கு சீட்களை கொடுத்து காலில் விழுந்த கொத்தடிமைகள்தானே நீங்கள்?

ஆனால் , பாஜக-வுடன் கூட்டணியில் இருந்த போதும், 7.5% இடஒதுக்கீடு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், காவிரி மேலாண்மை ஆணையம், என்ற அறிவிப்பு என தமிழ்நாட்டின் எந்த அடிப்படை உரிமையும் பறிபோகக் கூடாது என்ற அடிப்படையில் மக்களுக்காண ஆட்சி செய்து, தமிழ்நாட்டை காத்திட்ட இயக்கம்தான் அஇஅதிமுக. மத்திய அரசின் அனைத்து ஆய்வறிக்கைகளிலும் அன்று தமிழ்நாடு முன்னிலை வகிக்க ஒரே காரணம், 10 ஆண்டு காலம் அஇஅதிமுக நடத்திய மக்களுக்கான ஆட்சி; உலக நாடுகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தது எங்கள் "தமிழ்நாடு மாடல்" ஆட்சி!
ஆனால், ஒன்றிற்கும் உதவாத,
உருப்படாத ஒரு வெற்று மாடல்
அரசை நடத்தி கொண்டு,
தனக்குத் தானே கையைத் தட்டிக் கொண்டு, பொம்மை ஆட்சி நடத்தும் நீங்கள், மக்களை பொறுத்தவரை வெறும் விளம்பர மாடல்தான்.
அப்படி என்ன ஆட்சி செய்து கிழித்து விட்டீர்கள் என்று மேடையில் முதல்வர் ஸ்டாலின் வீரவசனம் பேசுகிறீர்கள்? எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் கேட்கிறேன்-
உங்களால் என்னுடன் நேருக்கு நேர் நின்று தனியாக விவாதிக்க முடியுமா? அந்த தெம்பு, திராணி உங்களுக்கு இருக்கிறதா? எத்தனை துண்டு சீட்டுகள் வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள்! பாத்துக்கலாம் !" என்று காட்டமாக எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: பேரறிஞர் அண்ணா மட்டும் இருந்திருக்கணும்.. மும்மொழியை ஏற்றுக் கொண்டிருப்பார்.. டிடிவி தினகரன் ஒரே போடு!
இதையும் படிங்க: தமிழ்நாடு பிச்சைக்கார மாநிலமா? மத்திய அரசை வாட்டி எடுத்த ஸ்டாலின்!!