நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள அக்ரஹாரம் பகுதியில் வசித்து வந்தவர் மூதாட்டி சரஸ்வதி. அவருக்கு வயது 90. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மூதாட்டி சரஸ்வதி அக்ரஹாரம் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டில் தனியே வசித்து வந்தார். இந்நிலையில் மார்ச் 15 காலை மூதாட்டி சரஸ்வதி தனது வீட்டில், மூக்கு, காது உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டி சரஸ்வதி சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன், திருச்செங்கோடு டிஎஸ்பி கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் மூதாட்டி சரஸ்வதி காதுகள் சேதப்படுத்தபட்டு, காதில் அணிந்திருந்த தங்க தோடு மாயமானது தெரியவந்தது. உடனே நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளும் காணும் பணியும் துரிதப்படுத்தப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியில் சுற்றித் திரியும் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
இதையும் படிங்க: பெண் டாக்டரை மிரட்டி கார் பறிப்பு - துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி கைது

போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அக்ரகாரம் பகுதியை சேர்ந்த விசைத்தறி கூலி தொழிலாளிகள் தாமோதரன் வயது 30, கோகுல்ராஜ் வயது 19 ஆகிய இருவரும் மூதாட்டி சரஸ்வதியை நீண்ட நாட்களாக நோட்டம் விட்டு வந்தது தெரிந்தது. குடிப்பழக்கம், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான அவர்கள் இருவரும் அன்றாட செலவிற்கும், மது குடிப்பதற்கும் மூதாட்டியை தொந்தரவு செய்து வந்துள்ளனர்.
இதனிடையே மது போதையில் அணிந்திருக்கும் நகைகளுக்காக அவரின் காதை அறுக்கவும் திட்டம் தீட்டி உள்ளனர். இதன்படி அதிகாலை நேரத்தில் அவருடைய வீட்டில் நுழைந்த இளைஞர்கள், மூதாட்டி தூங்கும் போது அவரது காதில் உள்ள தோட்டை பறித்துள்ளனர்.


மூதாட்டி வலியால் துடித்து கத்தவே மூதாட்டியை முகம், மார்பு பகுதி என பல்வேறு இடங்களில் கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். இதனால் ஏற்பட்ட வலியிலும், மூச்சு திணறியும் மூதாட்டி இறந்துள்ளார். மூதாட்டி மயங்கியதாக நினைத்து அந்த இளைஞர்கள் தப்பி ஓடியது தெரியவந்தது..
இதனையடுத்து அவர்கள் இருவரிடமிருந்து சுமார் இரண்டு கிராம் எடையுள்ள மூதாட்டி சரஸ்வதியின் தங்கத்தோடு பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார் குமாரபாளையம் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். 2 கிராம் தங்க தோடுக்காக மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: பரபரப்பை ஏற்படுத்திய கொலை... ஆயுள் தண்டனை கொடுத்த நீதிமன்றம்!!