சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், கம்ப சித்திரம் விழா நடைபெற்றது. கம்பரையும், ராமனையும் கொண்டாடும் நோக்கில் நடந்த இந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சர் ஹண்டே, சாஸ்த்ரா பல்கலை இயக்குநர் சுதா சேஷய்யன், எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா, வழக்கறிஞர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பேசினர்.

அப்போது, முன்னாள் அமைச்சர் ஹண்டே, தான் எழுதிய ராமாயணத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நுாலை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வழங்கினார். அப்போது, கம்பராமாயணத்தை பரப்பிய தமிழறிஞர்களுக்கு, கேடயங்கள் வழங்கி, ஆளுநர் ரவி பாராட்டினார்.
இதையும் படிங்க: வக்பு சட்டத் திருத்தம்.. மசூதிகள், நினைவிடங்களுக்கு பாதிப்பா.? விரிவாக விளக்கிய பாஜக!

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, கம்பர் ராமபக்தி பற்றியும், ராமரை பற்றியும் மிகச் சிறப்பாக, தொன்மை வாய்ந்த தமிழ் மொழியில் எழுதி உள்ளார் என்றும் இந்தியர்கள் ஒவ்வொருவர் மனதிலும் ராமர் இருக்கிறார் எனவும் கூறினார். பழங்குடியினருக்கு ராமாயண கதைகள் தெரிந்துள்ளதாகவும், ஆன்மிக ஆற்றலே இந்தியாவின் பலமாக இருக்கிறது என்றும் கூறினார்.

ராமாயணத்தை தெரிந்து கொள்வதன் மூலம், இளைஞர்களிடையே தன்னம்பிக்கை மற்றும் எழுச்சி ஏற்படுகிறது என்று ஆளுநர் ரவி தெரிவித்தார். மேலும், தனிமனித வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, ஆட்சி முறை என, அனைத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டு ராமாயணம் எனவும், அனைத்து தர்ம அறநெறிகளை போதிப்பதாகவும் கூறியுள்ளார். வடமாநிலங்களில் துளசிதாசர் ராமாயணம் பற்றி அறிந்துள்ளதாகவும் ஆனால் அதே சமயம் தமிழகத்தில் ராமரை பற்றி கேட்கும் போது அதிக அளவில் தெரிந்திருக்கவில்லை அது தனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர், கடந்த மார்ச் 3ஆம் தேதி மயிலாடுதுறையில் கம்பர் பிறந்த ஊரில் கம்பராமாயண விழா தொடங்கியதாகவும் வரும் 12ஆம் தேதி ஸ்ரீரங்கத்தில் கம்பராமாயணம் அரங்கேற்றம் நடக்க உள்ளதாகவும் கூறினார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமில்லாமல் கம்பர் விழா தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், கம்பர் குறித்து பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் கம்பரைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மிஷன் கம்பர், மிஷன் கம்பராமாயணம் என்று ஆளுநர் ரவி நிகழ்ச்சியின்போது பேசினார்.
இதையும் படிங்க: பாம்பன் புதிய ரயில் பாலம் இன்று திறப்பு.. இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி.!