ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் நேபாளத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலக தலைவர்கள் உள்பட பலரும் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.
பிரதமர் மோடி டில்லியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் ஆலோசனை நடத்தினார். மத்திய அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் சென்று இறந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பஹல்காம் சென்ற அமித் ஷா, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களை நேரில் ஆய்வு செய்தார். இதற்கிடையே, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், டில்லியில் முப்படை தளபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், என்ஐஏ அதிகாரிகள் அடங்கிய குழு காஷ்மீர் விரைந்தது. பயங்கரவாதிகளின் ஊடுருவல், அவர்கள் தீட்டிய சதித்திட்டம், பதுங்கியிருக்கும் இடம் குறித்து ராணுவத்தினருடன் என்ஐஏ அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். பைசரன் பசுமை பள்ளத்தாக்கின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் சல்லடை போட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பயங்கரவாதிகள் தாக்குதல்.. இஸ்ரேலை போல பழிவாங்குவோம்..! பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை..!

துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் நொடிக்கு நொடி விவரிக்கும்படி கூறி, பயங்கரவாதிகளின் திட்டத்தை முழுமையாக உள்வாங்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் நான்கு பயங்கரவாதிகள் இரு குழுக்களாக பிரிந்து இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அரங்கேற்றியது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து, ஏ.கே., 47 மற்றும் எம் - 4 துப்பாக்கிகளின் காலி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பஹல்காம் படுகொலைக்குப் பின்னணியில் அடையாளம் காணப்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதியான ஹாஷிம் மூசா , பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப் படைகளின் முன்னாள் பாரா கமாண்டோ என்பது பயங்கரவாத சதித்திட்டம் குறித்த விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லக்ஷர் இ தொய்பாவுடன் இணைந்து செயல்படும் தீவிர பயங்கரவாதியான மூசா, பாகிஸ்தான் சிறப்புப் படையான SSG-யின் துணை கமாண்டோக்களில் ஒருவராக இருந்ததும் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் சிறப்புப் படையான SSG-யின் துணை கமாண்டோக்கள் வழக்கத்திற்கு மாறான போரில் அதிக பயிற்சி பெற்றவர்கள் மற்றும் ரகசிய நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள். தீவிரமான மற்றும் கடுமையான பயிற்சி முறையை பின்பற்றுபவர்கள். SSG கமாண்டோக்கள் அதிநவீன ஆயுதங்களைக் கையாள்வதிலும், கைகோர்த்துப் போரிடுவதிலும் திறமையானவர்கள்.
இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக சந்தேகப்படும் 15 பேரிடம் உளவுத்துறை மற்றும் என்.ஐ.ஏ மேற்கொண்ட தீவிர விசாரணையில் SSG-ஐ சேர்ந்த முன்னாள் பாரா கமாண்டோ ஹாசிம் மூஸாவை லஷ்கர் இ தொய்பா அமைப்பிற்கு பாகிஸ்தான் ராணுவம் அனுப்பி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பஹல்காமில் நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தேச துரோகிகள்! பயங்கரவாத தாக்குதலுக்கு உதவிய வஞ்சகர்கள்.. பெயர், விவரங்கள் அறிவிப்பு..!