ஊரெல்லாம் அதிமுக -பாஜக கூட்டணி உறுதியாகி விட்டது என்று கூறிவந்தாலும் அதை வெளிப்படையாக கூறாமல் நழுவிச் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் விதித்த அனைத்து நிபந்தனைகளையும் அமித் ஷா ஏற்றுக் கொண்டாலும் ஒரே நிபந்தனையால் கூட்டணி ஊசலாட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இந்நிலையில் பாஜக -அதிமுக கூட்டணி அமைய எடப்பாடி பழனிச்சாமி பல நிபந்தனைகளை விதித்ததாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும் என்றும் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி ஒதுக்கீடு, எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு என்பது குறித்து அதிமுக தான் முடிவு எடுக்கும். இந்த விவகாரங்களில் பாஜக தலையிட கூடாது. கூட்டணி அமையும் பட்சத்தில் டிடிவிினகரன், ஓ.பி.எஸ், சசிகலா ஆகியோரை கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ள முடியாது என நிபந்தனை விதித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இதையும் படிங்க: இதுக்குதாங்க அமித் ஷாவை சந்தித்தேன்.. எடப்பாடி பழனிசாமி சொல்ல வர்றது என்னன்னா..!!

அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் மறைமுக பனிபோர் இப்போதும் நிலவி வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அமித்ஷாவிடம் கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. டாஸ்மார்க் ஊழல் விவகாரத்தில் அமலாக்கத்துறை உரிய நடவடிக்கை எடுத்து திமுக முக்கிய புள்ளிகளை நிச்சயம் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
அண்ணாமலையை பொருத்தவரை அவர் அதிமுக கூட்டணியை ஆரம்பத்தில் இருந்தே விரும்பவில்லை. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கோ, அண்ணாமலை பாஜக தமிழக தலைவராக இருப்பது பிடிக்கவில்லை. இருவருக்கும் நிலவி வரும் பனிப்போர் தொடர்ந்து வருகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணியை அண்ணாமலை விரும்பவில்லை. அதேபோல் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருக்கும் வரை கூட்டணி அமைக்க வேண்டாம் என நினைக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இருப்பினும் பாஜக எடுக்கக்கூடிய முடிவுக்கு அண்ணாமலை கட்டுப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

அனைத்தையும் கேட்டுக் கொண்ட அமித் ஷா, நீங்கள் டி.டி.வி.தினகரன், சசிகலா, ஓ.பி.எஸை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அதிமுகவே தலைமை தாங்கிக் கொள்ளட்டும். நீங்களே முதல்வர் வேட்பாளராக இருந்து கொள்ளுங்கள். ஆனால், அண்ணாமலைதான் தமிழக பாஜக தலைவராகத் தொடர்வார். ஆனால், உங்கள் கூட்டணி விவகாரங்களில் அவர் தலையிட மாட்டார். அவருக்கு பதிலாக உங்களுடன் தேர்தலில் பணியாற்ற தமிழக பாஜகவை சார்ந்த ஒரு உயர் அதிகாரக்குழுவை நியமிக்கிறோம் என அமித் ஷா, எடப்பாடி பழனிசாமியிடம் கூறியுள்ளார்.
ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, அமித் ஷாவிடம், எங்களது முக்கிய நிபந்தனைகளில் ஒன்று அண்ணாமலையை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான். அவருக்கு அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் விருப்பமில்லை. அவர் இந்தக் கூட்டணி அமையக்கூடாது ன்பதற்காகவே அதிமுகவில் இருந்து பிரிந்து போனவர்களை அருகில் வைத்துக் கொண்டு அதிமுகவை மறைமுகமாக விமர்சித்து வருகிறார். அவரை வைத்தெல்லாம் முடியாதுங்க'' என வெளிப்படையாகவே கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு பிடி கொடுக்காமல் அனுப்பி வைத்துள்ளார் அமித் ஷா.

ஆகையால்தான், கூட்டணி குறித்து பேசியும், எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவிடம் தமிழக நலன்களுக்காக கோரிக்கை மட்டுமே வைப்பதற்காக சந்தித்தோம் எனக் கூறி வருகிறார். அண்ணாமலை பதவி நீக்கம் என்கிற ஒற்றைப் புள்ளியில் கூட்டணி முடியாமல் வந்து நிற்கிறது'' என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அண்ணாமலையை நீக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பதாலும் அதற்கு பாஜக தலைமை தெளிவான பதிலை கூறாமல் நழுவுவதாலும் வெளிப்படையாக எடப்பாடி பழனிச்சாமியால் பாஜக கூட்டணியை முழுமனதாக அறிவிக்க முடியவில்லை'' என்று கூறப்படுகிறது.

இன்னொரு வகையில், அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசியதும் இதை உணர்த்தி உள்ளது. ''அரசியல் கணக்கு எதுவுமில்லை. எங்களுடைய நோக்கம் அது இல்லை. பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் சிறப்பாக வளர்ந்து கொண்டு வருகிறது. தேசிய ஜனநாயக கட்சிகளின் கூட்டணி முன்னேறி வருகிறது. எல்லோருடைய நோக்கமும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என எல்லோரும் விரும்புகிறார்கள். அதை ஒற்றைக் கோட்டில் கொண்டு செல்ல வேண்டும்.

நமது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லோரும் ஒரே மேடையில் இருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து இணையலாம். யாரையும் வேண்டாம் என்று சொல்லப் போவதில்லை. அதிகாரப்பூர்வமாக உள்துறை அமைச்சரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். யாரையும் உள்துறை அமைச்சர் வேண்டாம் என்று சொல்லப்போவதில்லை.
இப்போது மேடையில் பார்த்திருப்பீர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எல்லா கட்சித் தலைவர்களும் மேடையில் இருந்தார்கள். வரமுடியாத தலைவர்கள் அவர்களது பிரதிநிதிகளை அனுப்பி இருக்கிறார்கள். இதே மேடையில் ரமலான் நோன்பு திறப்பு விழாவில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களையும் அழைத்துக் காட்டி இருக்கிறோம்'' எனப் பேசி இருந்தார்.
அண்ணாமலையின் இந்தப்பேச்சில் உள்ள அர்த்தம் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவின் சந்திப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.
இதையும் படிங்க: அமித் ஷாவை சந்தித்தது இதற்குத் தான்! கூட்டணி குறித்து மனம் திறந்த இபிஎஸ்.. கொள்கை வேறு.. கூட்டணி வேறு..!